Published : 25 Nov 2021 02:01 PM
Last Updated : 25 Nov 2021 02:01 PM

சமூகப் பாதுகாப்பு திட்டம்; புதிய ஓய்வூதியப் பயனாளர்களுக்கான ஆணை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை

சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் புதிதாகச் சேர்க்கப்பட்ட பயனாளர்களுக்கான ஓய்வூதியம் பெறும் ஆணையை வழங்கி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (25.11.2021) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் புதிதாக 1,01,474 பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும், இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டம், மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம், முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம், ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்டோர் ஓய்வூதியத் திட்டம், 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மற்றும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் ஆகிய ஓய்வூதியத் திட்டங்களின் வாயிலாக இதுநாள் வரை 33 லட்சத்து 31 ஆயிரத்து 263 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர்.

இத்திட்டங்களுக்கென 2021-22ஆம் ஆண்டிற்கான திருத்திய வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ.4,807.56 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது, சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் கோரி புதிதாக வரப்பெற்ற விண்ணப்பங்களில், மாநில அளவில் 1 லட்சத்து, ஆயிரத்து 474 பேர் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இவர்களில், இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 48,077 பயனாளிகளுக்கும், இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 1,359 பயனாளிகளுக்கும், இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 4,346 பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 14,739 பயனாளிகளுக்கும், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 28,209 பயனாளிகளுக்கும், முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2,397 பயனாளிகளுக்கும், ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்டோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 1,732 பயனாளிகளுக்கும், 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 554 பயனாளிகளுக்கும், முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 61 பயனாளிகளுக்கும் என மொத்தம் 1 லட்சத்து, ஆயிரத்து 474 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடக்கமாக முதல்வர் ஸ்டாலின் இன்று 10 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்."

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x