Published : 24 Nov 2021 03:06 PM
Last Updated : 24 Nov 2021 03:06 PM

மருத்துவ மாணவர் சேர்க்கையில் கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் இடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை

நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் கிராமப்புற மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:

"முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (24-11-2021) அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேப்பிட்டல் லாண்டு நிறுவனத்தின் சார்பில் ரூ.2 கோடியே 16 லட்சம் மதிப்பில் சி.எஸ்.ஆர். நி பங்களிப்பில் பி.எஸ்.ஏ., தொழில்நுட்பத்துடன்கூடிய ஒரு நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்திடும் ஆக்ஸிஜன் ஜெனரேட்டரை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:

கடந்த மே மாதத்தில் தமிழகத்தில் கொரோனா உச்சத்தில் இருந்த நேரத்தில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பேரிடருக்கு உதவியாய் அரசுடன் கரம் கோர்க்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளையேற்று ஏராளமான தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் தமிழக அரசுடன் இணைந்து மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பேருதவியாய் இருந்தார்கள்.

‘கேப்பிட்டா லாண்டு’ நிறுவனத்தின் சார்பில் வடசென்னையில் புகழ்பெற்ற ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 2 கோடியே 16 லட்சம் செலவில் ஆக்ஸிஜனை உற்பத்திச் செய்யக்கூடிய ஜெனரேட்டரை நிறுவியுள்ளனர். இதன் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கக்கூடிய 100 நோயாளிகளுக்கும் ஆக்ஸிஜன் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு கூடுதல் சிறப்பாக இந்த ஆக்ஸிஜன் ஜெனரேட்டரை நான்கு ஆண்டுகளுக்கு பராமரிப்பிற்கும், கண்காணிப்பதற்குமான பணிகளை கேப்பிட்டல் லாண்டு நிறுவனமே மேற்கொள்ள உள்ளது.

நிதிநிலை அறிக்கையில் வயது மூத்தோருக்கான சிறப்பு வார்டுகளை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இருந்தாலும் கூட வயது மூத்தோரான ஆதரவற்றோரை யாரோ ஒருவர் மருத்துவமனையில் சேர்த்துவிட்ட பிறகு அவர்களைப் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள முனையாமல் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க, அவர்களைப் பாதுகாக்க அனைத்து அரசு மருத்துவமனைகளின் முதல்வர்கள், மருத்துவமனையின் தலைமை பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதுபோல் ஏற்கெனவே திமுக மாநகராட்சி நிர்வாகத்தில் ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், வயதானவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சிகிச்சை அளித்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

நவம்பர் மாத இறுதிக்குள் முதல் தவணைத் தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவிகிதம் என்ற இலக்கோடு பணியாற்றி வருகிறோம். உலக அளவில் கூட தடுப்பூசி செலுத்துவதில் 85 சதவிகிதத்தில் தான் உள்ளது. ஏனென்றால் தடுப்பூசி செலுத்திக்கொண்டு அந்த நாட்டிலேயே இல்லாமல் வேறு நாட்டிற்கு சென்றுவிடுவதால் இவ்வாறு உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் முதல்தவணை தடுப்பூசி 76 சதவிகிதத்தினை அடைந்துவிட்டோம். 2வது தவணை தடுப்பூசி 40 சதவிகிதத்தினை அடைந்துள்ளது.

இன்னும் கிராமங்களுக்குச் சென்று வீடுகளில் தடுப்பூசி செலுத்துவதில் நேற்று ஒரே நாளில் 3.4 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வாரந்தோறும் இரண்டு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. இதனால் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 100 சதவிகிதம் தடுப்பூசியை செலுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். எனவே தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், இதனை பயண்படுத்தி கொள்ள வேண்டும்.

முதலமைச்சரால் தனியார் மருத்துவமனைகளில் தனியார் தொழில் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். நி பங்களிப்பில் இலவசமாக தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் இதுவரை பெறப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 23 லட்சத்து 83 ஆயிரத்து 340 ஆக உள்ளது.
இதுவரை இலவசமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்திய எண்ணிக்கை 27 லட்சத்து 19 ஆயிரத்து 707 ஆக உள்ளது. கையிருப்பு என்பது தனியார் மருத்துவமனைகளில் இல்லை. வடநாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கரோனாத் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாக தெரிகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நான்கு மருத்துவச் சங்கங்களுடான பேச்சுவார்த்தை நடைபெற்ற போது கூறியதாவது: கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவதற்கு ஏற்கனவே உள்ள விதி முறையின்படி என்றால் விரைவாக பணி கிடைக்காது என்பதால், முதல்வரிடம், கரோனாப் பணியில் உயிரிழந்த வாரிசுதாரர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அனுமதியைப் பெற்று விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நடப்பாண்டு 1500 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது என்பது இந்தியாவில் இதுவரை நடைபெறாதது. முதலமைச்சர் மத்திய அரசிற்கு குறிப்பாக பிரதமர், அமைச்சர்களுக்கு தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தின் விளைவாலும், தாங்கள் மத்திய அரசின் சுகாதார துறை அமைச்சரையும், அலுவலர்களையும் சந்தித்து வலியுறுத்தியதாலும் இந்த நிலையை எட்டப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கு வழங்கும் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை என்பது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர். தமிழகத்தில் இதுவரை ரூ.6 கோடியே 71 லட்சம் பேருக்கு கரோனாத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்."

இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x