Last Updated : 24 Nov, 2021 12:40 PM

 

Published : 24 Nov 2021 12:40 PM
Last Updated : 24 Nov 2021 12:40 PM

விருத்தகிரீஸ்வரர் கோயிலில் 40 ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி: எதிர்ப்பைத் தாண்டி அதிகாரிகள் நடவடிக்கை

விருத்தாசலம்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில், ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பையும் தாண்டி 40 ஆண்டுகாலம் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

விருத்தாசலத்தில் பழமை வாய்ந்த தலமாக விளங்கும் விருத்தகிரீஸ்வரர் கோயில் 17 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் கோயிலின் கட்டுமானங்கள் மட்டும் 9 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது. 8 ஏக்கரில் கோயில் திறந்தவெளி பிரகாரமாக உள்ளது. 5 ராஜ கோபுரங்களை உள்ளடக்கிய சிறப்பு வாய்ந்த இக்கோயிலைச் சுற்றி சுமார் 100 கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் மூலம் கோயிலுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் கோயிலின் கிழக்கு வாயில் மண்டபப் பகுதியில் கோவில் ராஜகோபுரம் உள்ளிட்ட கலையம்சங்களை மறைத்து சிலர் ஆக்கிரமித்து வணிக வளாகம் கட்டியுள்ளனர். இதனால் கோவிலின் முகப்பு முழுவதும் மறைக்கப்பட்டுள்ளது. மேலும் கோயில் மண்டபப் பகுதியில் கடைகள் எதுவும் அமைக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறை ஏற்கனவே ஆணை பிறப்பித்துள்ளது.

இருப்பினும் விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்து வந்த நிலையில், ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததன் பேரில், ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் ஓராண்டுக்கு முன் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையயடுத்து இந்து சமய அறநிலையத் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வந்த போது, 7 நாட்களில் கடைகளை காலி செய்வதாக ஆக்கிரமிப்பாளர்கள் உறுதியளித்ததன் பேரில், ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை கோவில் நிர்வாகத்தினர் ஒத்திவைத்தனர்.

இதனிடையே இக்கோவிலின் குடமுழுக்குப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பிப்ரவரி 6-ம் தேதி கோவில் குடமுழுக்கு நடத்த இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. எனவே கோயில் குடமுழுக்கு முன்பே ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கடந்த 1-ம் தேதி ஆணைப் பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து கோவில் நிர்வாகம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கியுள்ளது. இருப்பினும் அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வராததால், இன்று, விருத்தாசலம் இந்து சமய அறநிலையத்துறை கடலூர் உதவி ஆணையர் பரணிதரன், கோவில் செயல் அலுவலர் முத்துராஜா முன்னிலையில் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதுடன் தீக்குளிக்கக் முயன்றுள்ளனர். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து கோவில் செயல் அலுவலர் முத்துராஜா கூறுகையில்: கோவில் ராஜகோபுரத்தை மறைத்து, ராஜகோபுரத்தின் அருகே சுமார் 40 ஆண்டுகளாக 12 கடைகள் ஆக்கிரமிப்பு செய்து இருந்தது. அவற்றை நீதிமன்றம் மற்றும் ஆணையர் உத்தரவைப் பின்பற்றி அகற்றும் பணி நடைபெறுகிறது என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x