Published : 24 Nov 2021 03:08 AM
Last Updated : 24 Nov 2021 03:08 AM
திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு சசிகலா நிவாரண உதவிகளை வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், இங்குள்ள ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும், கனமழை தொடர்வதால் வெள்ளநீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் ஆங்காங்கே உள்ள சமூதாயக் கூடங்கள் மற்றும் பள்ளிக் கட்டிடங்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் 5 கிலோ அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதேபோல், இள்ளலூர் ஊராட்சி பெரியார் நகர், மானாம்பதி, கொட்டமேடு ஆகிய கிராமப் பகுதிகளுக்கு நேரில் சென்று சசிகலா நிவாரண உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமமுகவின் நிர்வாகிகள் சி.ஆர்.சரஸ்வதி, தாண்டவமூர்த்தி, அறிவகம், முனுசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT