Last Updated : 23 Nov, 2021 07:11 PM

 

Published : 23 Nov 2021 07:11 PM
Last Updated : 23 Nov 2021 07:11 PM

மது அருந்த மின்கம்பிகளைத் திருடிய 2 இளைஞர்கள்: மின்சாரம் தாக்கி பலி

நாகர்கோவிலில் மின்கம்பிகள், மற்றும் மின்சாதனங்களைத் திருடிய இரு இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள மீட் தெருவில், பயன்பாட்டில் இல்லாத பாழடைந்த வீடு ஒன்று உள்ளது. பூட்டப்பட்ட இந்த வீட்டு வளாகத்தில் இன்று காலை இரு இளைஞர்கள் சடலமாகக் கிடந்தனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கூடினர். தகவல் அறிந்த வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இளைஞர்கள் இறந்து கிடந்த வீட்டு வெளிகேட்டை உடைத்து உள்ளே சென்று, இருவரின் உடலையும் மீட்டனர். அப்போது அவர்களது உடலின் மேல் மின்கம்பி, மற்றும் மின்வயர்கள் கிடந்தன. உடல் பகுதியில் மின்சாரம் தாக்கியதற்கான காயங்களும் இருந்தன. அங்கு மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மின்கம்பிகள், மின்சாதனங்கள் அகற்றப்பட்டன. அதன் பின்னர் இருவரது உடலும் மீட்கப்பட்டன.

போலீஸார் நடத்திய விசாரணையில், அவர்கள் நாகர்கோவில் கோட்டாறு பாறைக்கால் மடத்தெருவைச் சேர்ந்த தொன்போஸ்கோ (20), கருங்கல் அருகே தொலையாவட்டத்தைச் சேர்ந்த ஜான் கிறிஸ்டோபர் (25) எனத் தெரியவந்தது. நண்பர்களான இருவரும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு மது குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தொன்போஸ்கோ மீது காவல் நிலையங்களில் 3 வழக்குகளும், கிறிஸ்டோபர் மீது வடசேரி காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்படப் பல வழக்குகள் உள்ளன.

வழக்கம்போல் நேற்று இரவு மீட் தெருவில் ஆட்கள் இல்லாத வீட்டில், சுற்றுச்சுவர் ஏறி குதித்து அங்கிருந்த மின்கம்பிகள், வயர்களை இருட்டுக்குள் நின்றவாறே திருடிவிட்டு வெளியே வந்துள்ளனர். பின்னர் வீட்டு வளாகத்தில் மின்கம்பத்துடன் இணைந்த ஸ்டே கம்பியை அறுத்து எடுக்க முயன்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்நேரத்தில் அது மின்கம்பத்தில் இணைந்த மின்கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் தென்போஸ்கோ, ஜான் கிறிஸ்டோபர் ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர்.

சம்பவம் நடந்த பழைய வீட்டின் உரிமையாளர் வெளியூரில் வசிக்கும் நிலையில், இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உல்லாச செலவிற்காக மின்சாதனப் பொருட்களைத் திருடவந்த இளைஞர்கள் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து வடசேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x