Published : 23 Nov 2021 05:45 PM
Last Updated : 23 Nov 2021 05:45 PM

எழுத்தாளர் ஜோ.டி.குரூஸின் ‘வேர் பிடித்த விளை நிலங்கள்’ நூல்: உலக மீனவர் தினத்தை முன்னிட்டு பாட்காஸ்டில் வெளியீடு

ராமேசுவரம்

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு பாட்காஸ்டில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ.டி.குரூஸின் ‘வேர் பிடித்த விளை நிலங்கள்’ நூலை கடல் ஓசை சமுதாய வானொலி வெளியிட்டுள்ளது.

பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையதளம் என்ற வரிசையில் புதிதாக இணைந்திருக்கும் ஊடகம்தான் ‘பாட்காஸ்ட்’ (Podcast). ‘பாட்காஸ்ட்’ என்பது அனைத்து வகை ஒலிபரப்புகளையும் குறிக்கும். ஆடியோ வடிவிலான நிகழ்ச்சிகளை இணையம் வாயிலாகக் கேட்டு ரசிப்பதற்கான வழியாக ‘பாட்காஸ்ட்’ அமைகிறது.

‘பாட்காஸ்ட்’ ஒலிபரப்புக்கும் வானொலி ஒலிபரப்புக்கும் மிக முக்கிய வேறுபாடே, நமக்குத் தேவையான நேரத்தில் தேவையான நிகழ்ச்சிகளைக் கேட்க முடியும் என்பதுதான். வானொலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும்போது மட்டுமே கேட்க முடியும். தவறும் பட்சத்தில் அந்த நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கு வாய்ப்பே இல்லை. ‘பாட்காஸ்ட்’ அப்படியல்ல; தேவையான வானொலியைப் பின்தொடரும் பட்சத்தில், உங்கள் செல்பேசிக்கே அந்த ஒலிபரப்பின் தகவல்கள் வந்துவிடும். தேவையான நேரத்தில் அந்த ஒலிபரப்பைக் கேட்டுக்கொள்ளலாம்.

‘ஆழி சூழ் உலகு’, ‘கொற்கை’, ‘அஸ்தினாபுரம்’ ஆகிய நாவல்கள் மூலம் தமிழகத்தின் கடலோடிகளின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்தவர் சாகித்ய அகாடமி விருதை பெற்ற எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ். இவரது சுயசரிதை நூல் ‘வேர் பிடித்த விளை நிலங்கள்’ ஆகும்.

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு பாம்பனில் நேசக் கரங்கள் அறக்கட்டளை சார்பாக நடத்தி வரும் கடல் ஓசை சமுதாய வானொலி, பாட்காஸ்டில் எழுத்தாளர் ஜோ.டி.குரூஸின் ‘வேர் பிடித்த விளை நிலங்கள்’ நூலை ‘பாட்காஸ்ட்’ ஒலிப் புத்தகமாக செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. இந்நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள கௌசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

விழாவில் எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ், நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் ராயப்பன், பாம்பன் நேசக்கரங்கள் அறக்கட்டளையின் துணை நிறுவனர் சுபேகா பெர்னாண்டோ, மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், ராமேஸ்வரம் துணை காவல் ஆணையர் தீபக் சிவாஜ், சுகாதாரத் துறையின் துணை இயக்குநர் குமரகுருபரன், கல்லூரியின் முதல்வர் ஹேமலதா, கடல் ஓசை சமுதாய வானொலியின் நிலைய இயக்குநர் காயத்திரி உஸ்மா ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் நிகழ்ச்சியில் திரளான கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். ஜோ.டி.குரூஸின் ‘வேர் பிடித்த விளை நிலங்கள்’ பாட்காஸ்டிங்கை https://www.facebook.com/kadalosaifm என்ற இணைப்பில் காணலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x