Published : 23 Nov 2021 10:07 AM
Last Updated : 23 Nov 2021 10:07 AM

சையது முஸ்தாக் அலி டி20; இரண்டாவது முறையாக வென்ற தமிழ்நாடு அணிக்கு வாழ்த்துகள்: முதல்வர் ஸ்டாலின்

சையது முஸ்தாக் அலி டி20 கோப்பையை இரண்டாவது முறையாக வென்ற தமிழ்நாடு அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சையது முஸ்தாக் அலி என்னும் மாநில அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் பல கட்டப் போராட்டத்திற்குப் பிறகு இறுதிப் போட்டியில் விஜய் சங்கர் தலைமயிலான தமிழ்நாடு அணியும், மனீஸ் பாண்டே தலைமையிலான கர்நாடக அணியும் நுழைந்தன.

நேற்று (22-ம் தேதி) நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை விட்டுக் கொடுத்து 153 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்று, தொடரை இரண்டாவது முறையாகக் கைப்பற்றியது. இறுதிப் பந்தில் வெற்றி பெறத் தேவையான ரன்களைச் சேர்த்த தமிழக வீரர் ஷாருக்கானுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றிய தமிழ்நாடு அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் முதல்வர் கூறியுள்ளதாவது:

"SyedMushtaqAliTrophy-இல் தொடர்ந்து 2-வது முறையாக வாகை சூடியிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு என்னுடைய வாழ்த்துகள்!

ஷாருக்கான், சாய் கிஷோர் உள்ளிட்ட இளம் திறமையாளர்கள் சிறப்பான - துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எல்லோரும் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்!"

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x