Published : 23 Nov 2021 03:06 AM
Last Updated : 23 Nov 2021 03:06 AM

டெல்லியை போல் சென்னையிலும் திரவ இயற்கை வாயு மூலம் பேருந்துகளை இயக்க பரிந்துரை: சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு செலவும் 40 சதவீதம் குறையும்

டெல்லியைப் போல் சென்னையிலும் திரவ இயற்கை வாயு (எல்என்ஜி) மூலம் பேருந்துகள் இயக்கும் திட்டத்தை செயல்படுத்தலாம் என தமிழக அரசுக்குபோக்குவரத்துக் கழக அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். இதன்மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு, எரிபொருள் செலவையும் 40 சதவீதம் குறைக்க முடியும்.

அதிகரிக்கும் வாகனங்கள்

நாட்டில் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் வாகனங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. மற்றொருபுறம் எரிபொருட்களின் செலவுகளும் அதிகரித்து வருகின்றன. எனவே, பெட்ரோல்,டீசலுக்கு மாற்றான திட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன. அதன்படி, மின்சார வாகனங்களை வாங்குவோருக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேபோல், அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. டெல்லியில் பெட்ரோல், டீசல் மூலம் பேருந்துகள் இயக்குவதை படிப்படியாக கைவிட்டு ‘சிஎன்ஜி’ எனப்படும் இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்படுகின்றன.

இதன் அடுத்த கட்டமாக ‘எல்என்ஜி’ எனப்படும் திரவ இயற்கை வாயு மூலம் தற்போதுபேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த புதிய தொழில்நுட்பத்தால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, எரிபொருளின் செலவும் பெருமளவு குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழகத்திலும் ஆய்வு

இதற்கிடையே, தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ‘எல்என்ஜி’ மூலமும் பேருந்துகளை இயக்கலாம் என போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். இதற்கான முதல்கட்ட ஆய்வுப் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எரிபொருள் செலவை குறைக்க...

இதுதொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறிய தாவது:

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் டீசல் செலவைக் குறைக்கும் வகையில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பல்வேறு திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக, சென்னை, திருச்சி, கோவை, மதுரை போன்ற மாநகரங்களில் மின்சாரப் பேருந்துகளை படிப்படியாக இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

முதல்கட்டமாக சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் 100 மின்சார பேருந்துகளை, வரும் ஜனவரியில் இயக்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதற்கான கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சார்ஜிங் மையங்கள் அமைப்பதற்கான 6 இடங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சோதனை முறையில் 2 பேருந்துகள்

மேலும், டெல்லியில் இயக்குவதுபோல், சென்னையிலும் ‘எல்என்ஜி’ எனப்படும் திரவ இயற்கை வாயு மூலம் 2 பேருந்துகளை தயார் செய்து சோதனை முறையில் இயக்கலாம் என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். இதன்மூலம் பெட்ரோல், டீசல் எரிபொருள் செலவை 40 சதவீதம் வரைகுறைக்க முடியும். அதேபோல்,சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளோம்.

இவையெல்லாம் ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கின்றன. இதற்கான ஒப்புதலை தமிழகஅரசு அளித்த பிறகு, அடுத்தடுத்து ஆய்வுப் பணிகள் நடை பெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x