Published : 23 Nov 2021 03:08 AM
Last Updated : 23 Nov 2021 03:08 AM

மதுரை சாலைகளில் வெட்டப்படும் பசுமை மரங்கள்: பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?

மதுரை கே.கே.நகர் 80 அடி சாலையில் பழமையான நிழல் தரும் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு வருவதால் விரைவில் இந்த சாலை பசுமையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகரில் சமீபகாலமாக சாலையோரங்களில் உள்ள பசுமையான மரங்களை வெட்டும் போக்கு அதிகரித்து வருகிறது. ஒருபுறம் மின்வாரியத்தினர் பராமரிப்பு பணி என்ற பெயரில் மின் கம்பிகளுக்கு இடையூறில்லாத கிளைகளையும் வெட்டுகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்கத்துக்காக மரங்களை வெட்டுகின்றனர். மற்றொரு புறம் தனி நபர்களும், வர்த்தக நிறுவனங்களும் தங்கள் கட்டிடங்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி மரங்களை வெட்டி விடுகின்றனர். மரம் வளர்ப்பு பற்றி பொதுமக்களிடையே பெரியளவில் விழிப்புணர்வு ஏற்பட்டும் மரங்களை பாதுகாக்க முடியவில்லை.

இந்நிலையில் மதுரை மாநகர் பகுதியில் உள்ள கே.கே.நகர் 80 அடி ரோடு, லேக்வியூ சாலையில் உள்ள மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுகின்றன. இந்த சாலைகளில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் வணிக ரீதியான கட்டிடங்களாக மாறி வருகின்றன. அதனால் கட்டிட உரிமையாளர்கள் தங்கள் கட்டிடங்களின் பார்வைக்காகவும், மரங்களின் வேர்களால் கட்டிடங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்ற அறியாமையாலும் மரங்களை வெட்டுகின்றனர்.

இந்த மரங்களை பாதுகாக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகத்துக்கு இங்கு மரங்கள் வெட்டப்பட்டதே தெரியவில்லை. மரம் வளர்ப்பு, மழைநீர் சேகரிப்பு பற்றி விழிப்புணர்வு மேற்கொள்ளும் மாநகராட்சி நிர்வாகம், அதன் சாலைகளில் உள்ள மரங்களையே பாதுகாக்க தவறுவது மதுரையின் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x