

என்னை நம்பர் ஒன் சி.எம் என்று சொல்வது போல், தமிழகத்தை நம்பர் 1 மாநிலம் என்று அனைவரும் சொல்ல வேண்டும்தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் இன்று நடைபெற்ற அகில இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் இணைந்து நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இக்கலந்துரையாடல் நிகழ்வில், தமிழக ஏற்றுமதி தொழில் துறைக்கு 100 பில்லியன் டாலர் ஏற்றுமதி வர்த்தக இலக்கு நிர்ணயித்து, அதற்கான திட்டங்களை வகுத்தமைக்காக முதல்வருக்கு அகில இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும், சென்னையில் 22.9.2021 அன்று நடைபெற்ற “ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு” - தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டில், “தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையை” வெளியிட்டது ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் தமிழ்நாடு அரசு, ஏற்றுமதியை ஊக்குவித்திட அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதையும், அதற்கான கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக செய்து வருவதையும், தேவையான ஒப்பந்தங்கள் மற்றும் ஆணைகள் உடனடியாக பிறப்பிக்கப்படுவதையும், திறன் மேம்பாட்டு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதையும் பாராட்டப்பட்டது.
இத்தகைய முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு ஏற்றுமதி தொழில் துறைக்கு மேலும் ஊக்கமளிக்க வேண்டுமென்று ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது:
உங்களுடைய நன்றிக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் சொன்ன பிரச்சனை மட்டுமல்ல, புதிய பிரச்சினைகள், தீர்க்க முடியாமல் இருக்கும் பல்வேறு பிரச்சனைகள், எதுவாக இருந்தாலும் எந்தநேரமும் இந்த அரசை நீங்கள் தொடர்பு கொள்ளலாம். நம்முடைய தொழில் துறை அமைச்சர் இருக்கிறா, தொழில்துறை செயலாளர் இருக்கிறார், முதல்வர் அலுவலகம் இருக்கிறது,
என்னுடைய அலுவலகத்தை தொடர்பு கொண்டால் உடனடியாக அந்தச் செய்தியை என்னிடம் சேர்த்துவிடுவார்கள். எல்லோரும் தமிழ்நாடு முதல்வரை நம்பர் ஒன் முதல்வ எனக் கூறுகிறார்கள். அதுபோல் தமிழ்நாட்டை நம்பர் ஒன் மாநிலம் என்று சொல்ல வேண்டும். அதற்கு நீங்கள் பக்கபலமாக இருந்து உங்கள் ஆதரவை தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
இக்கூட்டத்தில்,தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழிற் துறை அமைச்சர்தா.மோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன், சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ், தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் .எஸ். கிருஷ்ணன், மற்றும் இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன், திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எஸ். வினீத், அகில இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத் தலைவர் டாக்டர் ஏ. சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.