Published : 22 Nov 2021 07:13 PM
Last Updated : 22 Nov 2021 07:13 PM

மழை, வெள்ள பாதிப்பு குறித்து  மத்திய குழுவினரிடம் முழுமையாக தெரிவிக்கப்பட்டது: சென்னை மாநகராட்சி ஆணையர் 

மதுரை

மழை, வெள்ள பாதிப்பு குறித்து மத்திய குழுவினரிடம் முழுமையாக தெரிவிக்கப்பட்டது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை மத்தியக் குழுவினர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மத்திய அரசின் உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்தியக் குழுவினர் இன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மத்தியக் குழுவினர் நேற்று ரிப்பன் கட்டிட வளாகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகள் குறித்த புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு, உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, மத்தியக் குழுவினர் இன்று (22.11.2021) பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட வீராசெட்டி தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை மற்றும் ஜவஹர் நகர் ஆகிய பகுதிகளிலும், ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட அழகப்பா சாலையிலும் மழை வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது, மத்தியக் குழு உறுப்பினர்கள் விஜய் ராஜ்மோகன், ரனன்ஜெய் சிங், எம்.வி.என்.வரப்பிரசாத், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் கே.பணீந்திர ரெட்டி, அரசு முதன்மைச் செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையர் எம்.எஸ்.பிரசாந்த், எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், மா.சிவகுரு பிரபாகரன், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநர் பி.ஆகாஷ், திரு.வி.க.நகர் மண்டலக் கண்காணிப்பு அலுவலர் எம்.பிரதீப் குமார் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் முரளிதரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் உட்படப் பலர் உடனிருந்தனர்

மத்திய குழு ஆய்வு குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது ”கடந்த 20 நாட்களில் சென்னையில் 5 மடங்கு மழை கூடுதலாக பதிவாகியுள்ளது. அதிகளவில் மழை பெய்ததலால் சென்னையில் மழை வெள்ள பாதிப்பு அதிகமாக உள்ளது. 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகப்பட்சமாக மழை பதிவாகியுள்ளது.

மழை பாதிப்புள்ள இடங்களில் தண்ணீரை வடிய வைக்கும் பணி நடந்து வருகிறது. தண்ணீர் தேங்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

மழை, வெள்ள பாதிப்பு குறித்து மத்திய குழுவினரிடம் முழுமையாக தெரிவிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x