Last Updated : 22 Nov, 2021 03:48 PM

 

Published : 22 Nov 2021 03:48 PM
Last Updated : 22 Nov 2021 03:48 PM

இதுவரை 4,190 பேருக்கு எலும்பு அறுவை சிகிச்சை: முன்மாதிரியாகத் திகழும் கோவை அரசு மருத்துவமனை

கோவை

எலும்பு முறிவு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்ட ஆறு மணி நேரத்துக்குள் 4,190 பேருக்கு கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் டீன் நிர்மலா தெரிவித்தார்.

சாலை விபத்து மற்றும் பிற விபத்துகளால் எலும்பு முறிவு ஏற்பட்டு, மாதந்தோறும் சுமார் 250 முதல் 300 பேர் கோவை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு எலும்பு முறிவு ஏற்பட்டு, அனுமதிக்கப்பட்ட ஆறு மணி நேரத்துக்குள் மருத்துவமனையின் முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை நிறுவனம் மூலம் கடந்த 2017-ம் ஆண்டு முதல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.

இந்த சிகிச்சை முடிந்து மூன்று முதல் நான்கு நாட்களில் நோயாளிகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுகின்றனர். இதற்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் கோவை அரசு மருத்துமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மருத்துவனையின் டீன் நிர்மலா கூறியதாவது:

"கடந்த 2017-ம் ஆண்டு முதல் இதுவரை 4,190 நோயாளிகளுக்கு ஆறு மணி நேரத்துக்குள் எலும்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சைத் துறை இயக்குநர் செ.வெற்றிவேல் செழியன், மருத்துவர்கள் முகுந்தன், மாரிமுத்து உள்ளிட்டோர் சிறப்பாக சிகிச்சை அளித்து வருகின்றனர். இவ்வாறு ஆறு மணி நேரத்தில் எலும்பு அறுவை சிகிச்சை செய்வதில் மற்ற அரசு மருத்துவமனைகளுக்கு முன்மாதிரியாக கோவை அரசு மருத்துவமனை திகழ்கிறது. இதனால் நோயாளிகள் அரசு மருத்துவமனையிலிருந்து தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்வதும், அவர்களுக்குப் பெரும் பொருட்செலவு ஏற்படுவதும் தவிர்க்கப்படுகிறது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எலும்பு அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்யப்படுகின்றன. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மற்ற மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டபோதும், இங்கு 1,070 நோயாளிகளுக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகள் தடையின்றி நடைபெற்றன".

இவ்வாறு மருத்துவனையின் டீன் நிர்மலா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x