

தமிழகத்தில் மழை பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக மத்தியக் குழு இன்று தமிழகம் வருகிறது.
வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை சேதங்களைக் கண்டறிவதற்காக மத்தியக் குழு விரைவில் தமிழகம் வர உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து சேத விவரங்களை அளித்த திமுக எம்.பி. டி. ஆர். பாலு தெரிவித்தார்.
மேலும், வெள்ள நிவாரண நிதியாக தமிழகத்துக்கு 2,629 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் மழை பாதிப்பு தொடர்பாக தமிழக அமைச்சரவைக் கூட்டம் நேற்று (சனிக்கிழமை) நடந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மத்தியக் குழு தமிழகம் வர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி, வடகிழக்குப் பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்களைப் பார்வையிட, 7 அதிகாரிகள் கொண்ட மத்தியக் குழுவினர் இன்று பிற்பகல் வருகின்றனர். நவ. 22, 23 ஆகிய இரண்டு நாட்களிலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மத்தியக் குழுவினர் பார்வையிட உள்ளனர்.
22-ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ஒரு குழுவினரும், அதேபோல கன்னியாகுமரிக்கு ஒரு குழுவினரும் செல்கிறார்கள்.
23-ம் தேதி ஒரு குழு கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சைக்கும் மற்றொரு குழு வேலூர், ராணிப்பேட்டைக்கும் செல்கிறது. ஒரு குழுவை வருவாய் நிர்வாக ஆணையர் க.பணீந்திர ரெட்டியும், மற்றொரு குழுவை வருவாய்த் துறைச் செயலர் குமார் ஜெயந்தும் வழிநடத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.