Published : 23 Mar 2016 11:56 AM
Last Updated : 23 Mar 2016 11:56 AM

விஜயகாந்த் முதல்வராவது உறுதி: மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நம்பிக்கை

வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விஜயகாந்த் தமிழக முதல்வாராவது உறுதி என மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டணி, தொகுதி உடன்பாடு ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் தேர்தலில் ம.ந.கூ - தேமுதிக மகத்தான வெற்றி பெறும்; விஜயகாந்த் முதல்வராவார் என நம்பிக்கை தெரிவித்தனர்.

முதலில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்

மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக தலைவர்கள் பஞ்ச பாண்டவர்கள். திமுக, அதிமுக அல்லாத ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்தனர். அவர்களது கனவு நனவாக இன்று நல்ல சூழல் உருவாகியுள்ளது. இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள். திமுக கூட்டணி முயற்சியில் தோற்றதுபோல்; தேர்தலிலும் தோற்றுப் போகும். வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் ஒரு அரசியல் போர். இத் தேர்தலில் வெற்றி பெற்று விஜயகாந்த் முதல்வராக பதவி ஏற்பது உறுதி என முத்தரசன் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்

விஜயகாந்த் எடுத்துள்ள முடிவு ஒரு மகத்தான முடிவு. அவரது இந்த முடிவை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இது வெறும் பிரேக்கிங் நியூஸ் அல்ல ராக்கிங் நியூஸ். தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முடிவு. காஞ்சிபுரம் வேடல் அரசியல் திருப்புமுனை மாநாட்டிலேயே விஜயகாந்த் தான் கிங்காக (முதல்வராக) இருக்கவே விரும்புவதாக தெரிவித்தார். நான் முதல்வர் என்பதை அவர் உறுதிப்படுத்தினார். இந்த கூட்டணி அதிமுகவை அப்புறப்படுத்த உருவான கூட்டணி. விஜயகாந்த் நிச்சயம் முதல்வராவார். கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்தபோது விஜயகாந்த் பேரம் பேசினார் என அவதூறுகள் பேசப்பட்டன. அத்தனை அவதூறுகளையும் அவர் விஜயகாந்த் தவிடுபொடியாக்கிவிட்டார் என தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:

மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணி இனி 'விஜயகாந்த் அணி' என அழைக்கப்படும். இக்கணம் முதல் நாங்கள் தேர்தல் களம் கண்டுள்ளோம். இக்கூட்டனி மகத்தான வெற்றி பெறும். விஜயகாந்த் கிங்காவார். முதல்வராவது உறுதி. தேர்தலில் வெற்றி பெற்றால், கூட்டனி ஆட்சியே அமையும். மக்கள் எதிர்பார்த்த கூட்டணி, மாற்றம் தரும் கூட்டணி, மகத்தான கூட்டணி, மாபெரும் வெற்றிக் கூட்டணி கேப்டன் விஜயகாந்த் அணி. இந்தக் கூட்டணி உருவாக வித்திட்ட அனைவருக்கும் மனமார்த நன்றி என வைகோ தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:

விஜயகாந்த் கிங் மேக்கர் அல்ல அவர்தான் கிங். வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணி மகத்தான வெற்றி பெறும். இத்தேர்தலில் அதிமுகவுக்கும் - எங்கள் கூட்டணிக்கும்தான் நேரடிப் போட்டி. இக்கூட்டணி வெற்றி பெற மக்கள் உதவ வேண்டும் என ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x