

புதுச்சேரி மாநிலத்தில் 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று (நவ. 20) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 2,124 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 19, காரைக்காலில் 16, ஏனாமில் 7, மாஹேவில் 1 பேருக்கும் என மொத்தம் 43 பேருக்கு (2.02 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 631 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 74 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 243 பேரும் என மொத்தமாக 317 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,869 ஆகவும், இறப்பு விகிதம் 1.45 சதவீதமாகவும் உள்ளது. புதிதாக 40 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 445 (98.30 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 11 லட்சத்து 72 ஆயிரத்து 390 பேருக்கு (இரண்டாவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.