நெல்லையில் வளர்ப்புத் தந்தையால் தீ வைக்கப்பட்ட சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு
நெல்லை மாவட்டம் பணகுடியில், தின்பண்டம் திருடியதாக வளர்ப்புத் தந்தையால் தீ வைக்கப்பட்ட 10 வயதுச் சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு பாரதி நகரில் வசித்து வருபவர் அந்தோணிராஜ். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில், இரண்டாவதாக சுஜா என்பவரைத் திருமணம் செய்துள்ளார். அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி முதல் கணவர் மூலம் மகேஸ்வரி (10) உட்பட மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
தற்போது குழந்தைகள் மூவரும் சுஜா மற்றும் அந்தோணிராஜுடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், மாதேஷ், மகராசி, மகேஸ்வரி மூன்று பேரும் தின்பண்டம் வாங்க காவல்கிணறு பேக்கரிக்குச் சென்றுள்ளனர். இவர்கள் 3 பேரும் கடையில் தின்பண்டம் வாங்கிவிட்டுப் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்தோணிராஜ் குழந்தைகளைத் திட்டியுள்ளார்.
பின்னர் 3 பேர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துள்ளார். மாதேஷ், மகராசி இருவரும் தப்பித்து ஓடிவிட்டனர். மகேஸ்வரி மட்டும் உடலில் 90 சதவீதத் தீக்காயங்களுடன் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி மகேஸ்வரி உயிரிழந்தார்.
இந்த வழக்குத் தொடர்பாக, கைது செய்யப்பட்ட அந்தோணிராஜிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
