Published : 20 Nov 2021 03:06 AM
Last Updated : 20 Nov 2021 03:06 AM

அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20-ம் தேதிக்கு பிறகு நேரடி தேர்வு: உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை

அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20-ம் தேதிக்கு பிறகு நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்கள் மீது போடப்பட்ட அனைத்துவழக்குகளும் திரும்ப பெறப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி நேற்று கூறியதாவது:

செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு முதல்வர் எங்களுக்கு ஆணையிட்டிருந்தார்.

அதன்படி, நான், உயர்கல்வித் துறை செயலர், கல்லூரிக் கல்வி இயக்குநர் மற்றும் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் இணைந்து 11 மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினோம்.

செமஸ்டர் தேர்வு நடத்துவதற்கு கால அவகாசம் வேண்டும் என்பதுதான் அவர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. பொறியியல் கல்லூரிகள் திறந்து 4 மாதங்களும், கலை அறிவியல் கல்லூரிகள் ஆரம்பித்து இரண்டரை மாதங்களும் ஆகின்றன. எனவே, தேர்வு நடத்துவதற்கு ஒரு மாத அவகாசம் வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர். நாங்கள் ஒரு மாதம் அல்ல, 2 மாதங்கள் தருகிறோம் என்று சொன்னோம்.

பொங்கல் முடிந்து ஜன.20-ம்தேதிக்கு பின்னரே அனைத்து வகை கல்லூரிகளுக்கும் (கலை,அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக், மற்றும் தன்னாட்சி கல்லூரிகள் உட்பட) தேர்வுகள் நடத்தப்படும் என்று மாணவர் அமைப்பினரிடம் கூறியிருக்கிறோம்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போடப்பட்ட அனைத்துவழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்தனர்.

வழக்குகள் வாபஸ்

அந்த கோரிக்கையை முதல்வர் ஏற்று, மாணவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி மாணவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்படும் என்று உறுதி அளித்துள்ளோம்.

எனவே, மாணவர்கள் எவ்விதஅச்சமும் கொள்ளத் தேவையில்லை. தேர்வுக்கு நல்ல முறையில் தயாராக வேண்டும். செமஸ்டர் தேர்வுகளை நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும். ஜனவரியில் செமஸ்டர் தேர்வு நடத்துவதற்கு முன்பு மாணவர்களுக்கு மாதிரி தேர்வும் நடத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x