Published : 19 Nov 2021 05:37 PM
Last Updated : 19 Nov 2021 05:37 PM

தமிழக அரசின் தடை வாபஸ்: திருவண்ணாமலையில் 20 மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் கிரிவலம்  

திருவண்ணாமலையில் 20 மாதங்களுக்குப் பிறகு இன்று கிரிவலம் சென்ற பக்தர்கள்.

திருவண்ணாமலை 

தமிழக அரசின் தடை விலக்கிக் கொள்ளப்பட்டதால், திருவண்ணாமலையில் 20 மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் இன்று (19-ம் தேதி) கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் என்பது உலக பிரசித்தி பெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கி.மீ. தொலைவு உள்ள கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசிக்கின்றனர். இந்நிலையில், கரோனா தொற்றுப் பரவல் எதிரொலியாக ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டதால், 2020-ம் ஆண்டு பங்குனி மாத பவுர்ணமிக்கு முதன்முறையாகத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை உத்தரவு தொடர்ந்து நீடித்தது.

கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட நிலையிலும், பவுர்ணமி கிரிவலத்துக்கான தடையை நீக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவில்லை. இருப்பினும் தடையை மீறி, இந்த ஆண்டு தொடக்கத்தில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

இந்நிலையில், கார்த்திகை மாதப் பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத் திருவிழா நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு 2-வது ஆண்டாக, இந்த ஆண்டும் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 2 நாட்களுக்குத் தலா 20 ஆயிரம் பக்தர்கள், கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து, 20 மாதங்களுக்குப் பிறகு, பவுர்ணமி நாளான நேற்று இரவு முதல் பக்தர்கள் கிரிவலம் செல்லத் தொடங்கினர்.

இதற்கிடையில், நவம்பர் 19 மற்றும் 20-ம் தேதி கிரிவலம் செல்வதற்கு www.arunachaleswarartemple.tnnrce.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் பா.முருகேஷ் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு மக்களைச் சென்றடைவதற்கு முன்பாக கிரிவலம் செல்லும் பக்தர்களின் வருகை இன்று காலை அதிகரித்தது. அவர்களை நகரம் மற்றும் கிரிவலம் செல்லும் பாதையில் தடுத்து நிறுத்தி, இணையதள முன்பதிவு குறித்து ஆய்வு செய்தனர்.

அப்போது பக்தர்கள், முன்பதிவு அறிவிப்பு என்பது தங்களுக்குத் தெரியாது என எடுத்துரைத்து, தங்களை அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டனர். பின்னர், அவர்களை பகுதி பகுதியாகப் பிரித்து கிரிவலம் செல்லக் காவல்துறையினர் அனுமதித்தனர். மழையும் இல்லாததால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.

அப்போது அவர்கள், ‘ஓம் நமசிவாய’ எனும் மந்திரத்தை உச்சரித்தபடி, அண்ணாமலையாரை வழிபட்டனர். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, தடையின்றி கிரிவலம் சென்று, பரம்பொருளை வழிபட்டது மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது” என பக்தர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x