Published : 19 Nov 2021 03:09 AM
Last Updated : 19 Nov 2021 03:09 AM

கடம்பூர் மலைப்பகுதியில் காட்டாறுகளின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுவது குறித்து ஈரோடு ஆட்சியர் ஆய்வு

கடம்பூர் மலைப்பகுதியில், இரு காட்டாறுகளின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுவது குறித்து, ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் கனமழை பெய்யும்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கால், பல கிராமங்கள் துண்டிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதுகுறித்து ‘மழைக்காலங்களில் தீவுகளாக துண்டிக்கப்படும் மலைக் கிராமங்கள்’ எனும் தலைப்பில் ‘இந்து தமிழ்’ நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.

இதில் கடம்பூர், தாளவாடி, தெங்குமரஹாடா உள்ளிட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் கிராம மக்கள் பாதிக்கப்படுவது குறித்தும், காட்டாறுகளின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை குறித்தும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், சத்தியமங்கலம் வட்டாரத்தில் ஆய்வு மேற்கொண்ட ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி, கடம்பூர் மலைப்பகுதியில் மோசமாக உள்ள சாலைகள் மற்றும் கட்டாற்று வெள்ளம் ஏற்படும் குரும்பூர் பள்ளம், சர்க்கரைப் பள்ளம் ஆகியவற்றைப் பார்வையிட்டார்.

நபார்டு திட்டத்தின் கீழ் சர்க்கரைப் பள்ளம் பகுதியில் ரூ.4.50 கோடி மதிப்பிலும், குரும்பூர் பள்ளத்தில் ரூ.3.60 கோடி மதிப்பிலும் புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடங்களை ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும், இப்பகுதியில் உள்ள சாலையை சீரமைப்பது குறித்தும் அவர் கேட்டறிந்தார். இந்த ஆய்வில் கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி, சத்தியமங்கலம் வட்டாட்சியர் ரவிசங்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x