Last Updated : 18 Nov, 2021 07:05 PM

 

Published : 18 Nov 2021 07:05 PM
Last Updated : 18 Nov 2021 07:05 PM

பொய் மருத்துவச் சான்றிதழ் வழங்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை: மருத்துவ கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை | கோப்புப் படம்.

மதுரை

பொய் மருத்துவச் சான்றிதழ் வழங்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவ கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் கோபிநாத் என்ற கோபி (27). இவரை கஞ்சா வழக்கில் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றம் 3 வாரம் ஜாமீன் வழங்கியது. 3 வாரத்துக்குப் பிறகு சரண் அடையவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கோபிநாத் சரண் அடையவில்லை. இதனால் அவரைக் கைது செய்யப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அவர் மீது குற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இரு வழக்குகளில் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கோபிநாத் மனுத்தாக்கல் செய்தார். அதில், விபத்தில் சிக்கியதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு 2 மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால் நீதிமன்றத்தில் சரண் அடைய முடியவில்லை என்று கூறியிருந்தார். தஞ்சாவூர் மருத்துவர் சி.பாலாஜி வழங்கிய மருத்துவச் சான்றிதழையும் அவர் தாக்கல் செய்தார்.

அந்த மருத்துவச் சான்றிதழ் மீது சந்தேகம் அடைந்து, அந்தச் சான்றிதழின் உண்மைத் தன்மையை ஆராய நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் நடத்திய விசாரணையில் அந்த மருத்துவச் சான்றிதழ் பெய்யானது எனத் தெரியவந்தது.

மேலும் மருத்துவர் பாலாஜி, விடுமுறை பெறுவதற்காகவே அந்தச் சான்றிதழ் வழங்கியதாகவும், ஆனால் கோபிநாத் தவறுதலாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாகவும், அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கடிதம் அளித்தார்.

இந்நிலையில் கோபிநாத்தின் முன்ஜாமீன் மனுக்கள் நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தன. தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் வழக்கறிஞர் என்.சதீஷ்பாபு வாதிடுகையில், ''மருத்துவர் பாலாஜி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கியுள்ளது'' என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

''மருத்துவர்கள் பொய் மருத்துவச் சான்றிதழ் வழங்குவதை நிறுத்தாவிட்டால், மருத்துவர்கள் அளிக்கும் எந்தச் சான்றிதழையும் நம்ப முடியாத நிலை ஏற்படும். இதுபோன்ற பொய்யான மருத்துவச் சான்றிதழ் வழங்கும் வழக்கத்தை அடியோடு ஒழிப்பதும், பொய் மருத்துவ மருத்துவச் சான்றிதழ் வழங்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், எதிர்காலத்தில் மருத்துவர்கள் பொய்யான மருத்துவச் சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டியதும் மருத்துவ கவுன்சிலின் கடமையாகும்.

இந்த வழக்கில் மனுதாரர் மீது 14 வழக்குகள் உள்ளன. 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரது முன்நடத்தை, பொய் மருத்துவச் சான்றிதழ் தாக்கல் செய்தது போன்ற காரணங்களுக்காக அவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன''.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x