நாளை கரையைக் கடக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: அடுத்த சில தினங்களுக்கு மழை நிலவரம் என்ன?

நாளை கரையைக் கடக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: அடுத்த சில தினங்களுக்கு மழை நிலவரம் என்ன?
Updated on
1 min read

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று இன்று தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னை அருகே கரையைக் கடக்கும். இதன் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று மற்றும் அடுத்த சில தினங்களுக்கு மழை நிலவரம்

18.11.2021

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், டெல்டா மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும். பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகள் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. திசையில் காற்று வீசும்.

19. 11.2021

திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

20.11.2021

கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழையும் பெய்யும்.

21.11. 2021

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

22.11.2021

வட உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் மிதமான மழையும் பெய்யும்.

சென்னை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும். அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை நீடிக்கும்.

மழைப்பொழிவு

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்திலுள்ள குந்தலம் பகுதியில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

18.11.2021: தென்மேற்கு வங்கக் கடல், தமிழகம் மற்றும் ஆந்திரக் கடலோரங்களில் சூறைக்காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசும்.

19.11.2021 தமிழகம் மற்றும் ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசும்.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in