

சென்னை மாநகராட்சி சார்பில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது என்று ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, “சென்னையில் மழை குறித்த பாதிப்புகளைப் பொதுமக்கள் 1913 என்ற எண்ணுக்குத் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். இந்தக் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இதற்காகத் தனிக் குழு செயல்படுகிறது.
வீட்டில் உள்ள அனைவரும் குடிநீரைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும். தேவையான பொருட்களை மக்கள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். மழைக் காலங்களில் மின்கம்பங்களைத் தொடக் கூடாது. தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். மழைக் காலங்களில் பாதுகாப்புக்காகவே மின்சாரம் நிறுத்தப்படுகிறது” என்று தெரிவித்தார்.