உதகையில் கொட்டித் தீர்த்த மழை; 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

மழை வெள்ளம் சூழ்ந்துள்ள உதகை சாலைப் பகுதி | படம்: ஆர்.டி.சிவசங்கர்.
மழை வெள்ளம் சூழ்ந்துள்ள உதகை சாலைப் பகுதி | படம்: ஆர்.டி.சிவசங்கர்.
Updated on
1 min read

வடகிழக்குப் பருவமழை காரணமாக உதகையில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

வடகிழக்குப் பருவமழை மற்றும் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறித்துள்ளது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், மலை மாவட்டமான நீலகிரியிலும் கனமழை கொட்டி வருகிறது.

குறிப்பாக 17-ம் தேதியான நேற்று மாலை உதகையில் கனமழை தொடர்ந்து பெய்தது. தலைகுந்தா, பிங்கர்போஸ்ட், பாலாடா, கோத்தகிரி, குந்தா, கூடலூர், குன்னூர் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக உதகையில் மட்டும் 4 மணி நேரத்தில் 98 மி.மீட்டர் மழை பதிவானது. தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாயத் தோட்டங்களில் மழை நீர் சூழ்ந்ததால், பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

உதகை சுற்றுவட்டாரப் பகுதிகளான காந்தள், கீரின்பீல்ட்டு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இடைவிடாது பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. பேருந்து நிலைய சாலை, ரயில்வே பாலம் பகுதி உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து தடைப்பட்டது.

இன்று காலை வரையிலான நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக உதகையில் 98 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோல் கோடநாட்டில் 85 மி.மீட்டர் மழையும், அவலாஞ்சியில் 83 மி.மீட்டர் மழையும், எமரால்டில் 56 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தேவாலாவில் 47 மி.மீட்டர், கேத்தி, கோத்தகிரியில், கிண்ணக்கொரை ஆகிய இடங்களில் தலா 43 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சராசரியாக 39.83 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in