Last Updated : 17 Nov, 2021 06:18 PM

 

Published : 17 Nov 2021 06:18 PM
Last Updated : 17 Nov 2021 06:18 PM

தற்காலிக சாலையை உடனடியாக அமைத்துக் கொடுத்த எம்எல்ஏ: கிராம மக்கள் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே காட்டாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிக பாதையை எம்எல்ஏ எம்.சின்னதுரை ஆய்வு செய்த புகைப்படம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலைக்கு மாற்றாக தற்காலிக சாலை உடனடியாக அமைத்துக் கொடுத்த கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினரை கிராம மக்கள் பாராட்டியுள்ளனர்

கந்தர்வக்கோட்டை அருகே பெரியகோட்டை ஊராட்சி கொத்தகப்பட்டியில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரமுள்ள நவக்கொல்லைப்பட்டிக்கு காட்டாற்று வெள்ளத்தை கடந்து செல்ல வேண்டும்.

இவ்வழியே பிரதான சாலை இல்லை. எனினும், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சிறிய அளவிலான சிமென்ட் தூம்பிலான மண் சாலையானது அண்மையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

ஏற்கெனவே, பல ஆண்டுகளாக இவ்வழியே தரமான சாலை அமைக்க வேண்டும் என தொடர் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருந்து வந்த நிலையில், 2 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் புதிய இணைப்பு சாலை அமைக்கக் கோரி கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரையிடும் அண்மையில் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

மழையோடு மழையாக வட்டாட்சியர் புவியரசனுடன் நேரில் சென்று ஆய்வு செய்த சட்டப்பேரவை உறுப்பினர் சின்னதுரை, தேவையான தூம்புகளைக் கொண்டு தற்காலிக சாலை அமைக்க அறிவுறுத்தினார். இதையடுத்து, ஊரக வளர்ச்சித் துறையினர் சார்பில் தற்காலிக இணைப்பு சாலை பணிகளை மேற்கொண்டு தற்போத் போக்குவரத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இதனை சட்டப்பேரவை உறுப்பினர் சின்னதுரை இன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வட்டாட்சியர் புவியரசன் உடனிருந்தார். பின்னர் மக்களை சந்தித்த சின்னதுரை, மழைக் காலம் முடிவடைந்ததும் தரமான தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

இதனிடையே, தற்காலிக சாலை உடனடியாக அமைத்து கொடுத்த சின்னதுரை எம்எல்ஏவை கிராம மக்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x