சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டதில் 1 லட்சத்து 58 ஆயிரத்து 572 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  தகவல்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Updated on
1 min read

வடகிழக்குப் பருவமழையால் சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட 43 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கரில் 1 லட்சத்து 58 ஆயிரத்து 572 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவ.17) காலை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் முன்னிலையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறும்போது, “வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாகவே துரித நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டதால் பாதிப்புகள் அதிகம் இல்லாமல் தமிழகம் தப்பித்துள்ளது. முழுமையாக பாதித்த பயிர்களுக்கு நிவாரண உதவியை முதல்வர் அறிவித்துள்ளார்.

சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட பரப்பளவு மொத்தம் 43,65,000 ஏக்கர். அதில் நீரில் மூழ்கியுள்ள மொத்தப் பயிர் பரப்பளவு 1,58,572 ஏக்கர். நெற்பயிர் மட்டும் 1,39,412 ஏக்கர். 33 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட பரப்பளவு 1,43,860 ஏக்கர், அதில் நெற்பயிர் மட்டும் 1,25,650 ஏக்கர்.

எதிர்க்கட்சிகள் செய்த தவறை மறைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளன. ஸ்மார்ட் சிட்டி (smart city ) சென்னையை ஒர்ஸ்ட்டு சிட்டியாக (Worst city) மாற்றி வைத்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in