பொங்கல் தொகுப்பில் முழுக் கரும்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு: அமைச்சர் சக்கரபாணி பேட்டி

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் விடுபட்ட கரும்பை இணைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு சார்பில் 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, நெய், வெல்லம் உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பைத் தமிழக அரசு அறிவித்தது. இதில் கரும்பு இடம்பெறவில்லை என்றும், உடனடியாகப் பொங்கல் தொகுப்பில் விடுபட்ட கரும்பை இணைக்க வேண்டும் என்றும் கடலூர் விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது;

"பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

அதன்படி, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, துணிப்பை ஆகிய 20 பொருட்களுடன் ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும்.

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் மக்கள்தொகைக்கு ஏற்ப டோக்கன் முறைகளில் பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே நடவடிக்கை மேற்கொள்வர்".

இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in