Published : 17 Nov 2021 02:57 PM
Last Updated : 17 Nov 2021 02:57 PM

திருப்பூரில் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல்: குடும்பத்தினர் தனிமைப்படுத்தல்

திருப்பூரைச் சேர்ந்த ஒருவருக்குப் பன்றிக்காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

திருப்பூர், வேலம்பாளையம், சோளிபாளையம் கேஆர்சி கீர்த்தனா நகர் பகுதியைச் சேர்ந்த 44 வயது ஆணுக்கு, கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சல், தொண்டை வலி மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்டவை இருந்தன. இந்த நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் தொடர்பாகப் பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்குப் பன்றிக்காய்ச்சல் தொற்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த மனைவி, மகன், மகள் மற்றும் மாமியார் ஆகியோருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வீட்டில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதையடுத்து அப்பகுதியில் மாநகர சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அதில் பலருக்கும் காய்ச்சல், சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொற்று அறிகுறிகள் யாருக்கும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், "திருப்பூர் மாவட்டத்தில் மாநகர் பகுதியில் உள்ள ஒருவருக்குப் பன்றிக்காய்ச்சல் தொற்று உறுதியாகியுள்ளது. ஹெச்1 என் 1 வகை பன்றிக்காய்ச்சல்தான். ஆனால், தொற்றாளர் நல்ல உடல் நிலையில் தேறியுள்ளார். அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாருக்கும் எவ்வித அறிகுறியும் இல்லை. அனைவரும் நல்ல நிலையில் உள்ளனர்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x