Published : 17 Nov 2021 02:03 PM
Last Updated : 17 Nov 2021 02:03 PM

விருதுக்கு விண்ணப்பிக்கச் சொல்வது அவ்விருதை அரசே விலை பேசுவதற்குச் சமம்: பால் முகவர்கள் சங்கம்

விருதுக்கு விண்ணப்பிக்கச் சொல்வது அவ்விருதை அரசே விலை பேசுவதற்கு சமமாகும் என்று தெரிவித்துள்ள பால் முகவர்கள் சங்கம், வீர தீரச் செயல்புரிந்தவர்களுக்கான அண்ணா பதக்கம் பெறத் தகுதியானவர்களை அரசே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பால் முகவர்கள் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

’’வீர தீரச் செயல்புரிந்தவர்களுக்கான அண்ணா பதக்கம் பெற மாவட்ட ஆட்சியருக்கோ அல்லது அரசின் இணையதளத்திலோ விண்ணப்பிக்க வேண்டும் என்கிற அரசின் அறிவிப்பு எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பாராமல் செயல்பட்டோரை அவமதிக்கும் செயலாகவே அமைந்திருக்கிறது.

இக்கட்டான காலகட்டங்களில் தங்களின் உயிரையும், உடமைகள் குறித்தும் கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாமல், எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் வீர தீரச் செயல்புரிந்தவர்களுக்கு அண்ணா பதக்கம் வழங்கிட உரியவர்களின் செயல்பாடுகள் அடிப்படையில் அரசுதான் தேடி அடையாளம் காண வேண்டுமே தவிர, அப்பதக்கம் பெற டிசம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்கிற தமிழக அரசின் அறிவிப்பு ஏற்புடையதல்ல.

ஏற்கனவே "மதிப்புறு முனைவர்" உள்ளிட்ட பல்வேறு விருதுகள் ரூ.30 ஆயிரம் தொடங்கி பல லட்சம் ரூபாய் வரை விலை பேசி வழங்கப்பட்டு வரும் சூழ்நிலையில் விருதுகள் மீதான மதிப்பு என்பது குறைந்துகொண்டே போகிறது. இந்நிலையில் வீரதீரச் செயல்புரிந்தோரை அரசு அடையாளம் கண்டு பதக்கம் வழங்கி கவுரவிக்காமல், அவர்களாகவே அப்பதக்கம் பெற மாவட்ட ஆட்சியருக்கோ அல்லது அரசின் இணையதளத்திலோ விண்ணப்பிக்க வேண்டும் எனச் சொல்வது அண்ணா பதக்கத்தை அரசே விலை பேசுவதற்கு சமமாகும்.

"விண்ணப்பித்துப் பெறுவதன் பெயர் விருதல்ல; அதன் பெயர் பரிசு", "விருதென்பது தகுதியானவர்களைத் தேடி வரவேண்டிய ஒன்று" என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடந்த ஆகஸ்ட் மாதம் கூறியிருந்த கருத்துகள் 100% உண்மை.

எனவே தகுதியானவர்களைக் கொண்டு நடுவர் குழு அமைத்து, அண்ணா பதக்கத்திற்குரிய வீரதீரச் செயல்புரிந்தோரை தேடிக் கண்டடைந்து அவர்களுக்கு அப்பதக்கத்தை வழங்குவதே உரியவர்களுக்கு அரசு செய்கின்ற கவுரவமாகும். இல்லையெனில் விருதுகளைப் பணத்திற்கு விலைபேசி வழங்கும் அமைப்புகளுக்கும், அரசுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் என்பதைத் தமிழக அரசு கவனத்தில்கொள்ள வேண்டும்’’.

இவ்வாறு பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x