Published : 16 Nov 2021 05:43 PM
Last Updated : 16 Nov 2021 05:43 PM

அரசுப் பள்ளிகளுக்கு 4,000 கரோனா தடுப்பு உபகரணங்கள்: டிவிஎஸ் நிறுவனம், கொரிய தூதர் இணைந்து வழங்கினர்

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 4,000 கரோனா தடுப்பு உபகரணங்களை டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர், கொரிய தூதர் ஆகியோர் இணைந்து வழங்கினர். இவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் வழங்கப்பட்டன.

கொரிய நாட்டின் தேசிய நிறுவன தினம் [Korean National Foundation Day] கடந்த மாதம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, தென்னிந்தியாவில் உள்ள நான்கு மாநிலங்களிலும் கோவிட் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதற்கு இன்கோ மையத்துடன் (InKo Centre) இணைந்து வேணு ஸ்ரீனிவாசன் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

மேலும் சென்னையில் உள்ள கொரியன் அசோசியேஷனும் [Korean Association] இணைந்து 70 ஆயிரம் முகக்கவசங்கள், 5 ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்களைத் தமிழக அரசிடம் அளிக்கிறது.

தென்னிந்தியா முழுவதுமுள்ள ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளிக் குழந்தைகளுக்காக வழங்கப்படும் கரோனா தடுப்பு உபகரணத் தொகுப்பில் கொரிய முகக்கவசங்கள், கை சுத்திகரிப்பான்கள், கை கழுவும் திரவம், வண்ண பென்சில்கள், ஓரிகாமி காகிதங்கள், சாக்கோபி ஆகியவை உள்ளன.

இதுகுறித்து கொரிய தூதர் க்வான் கூறுகையில், “இந்தக் கடினமான சூழலில் குழந்தைகளுக்கு ஆதரவளிக்க முடிவதில் நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். கரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு இந்தியாவில் கோவிட்-19 நிலைமை மிகப் பெரிய அளவில் மேம்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் தலைவர், இன்கோ மையத்தின் தலைவர் மற்றும் கொரியக் குடியரசின் நல்லுறவு மற்றும் கலாச்சாரத்திற்கான நல்லெண்ணத் தூதர் வேணு ஸ்ரீனிவாசன் கூறுகையில், “கடந்த ஆண்டும் இந்த ஆண்டும், பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக, நேரடியாக நடத்தப்படும் கொரிய நிறுவன விழா நிகழ்ச்சிகளை ஒத்திவைத்தோம். அதற்கு பதிலாகத் தனித்துவம் வாய்ந்த ஒரு சமூகப் பிணைப்புக்கான முன்னெடுப்பைத் தேர்வு செய்தோம்.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகளின் கல்வி மற்றும் சுகாதார அமைச்சகங்களின் ஒத்துழைப்புடன், அரசுப் பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள் ஆகியவற்றின் மூலம், குழந்தைகளுக்கு முகக்கவசங்கள், சுத்திகரிப்பான்கள் மற்றும் வண்ண வண்ண எழுதுபொருட்கள் ஆகியவற்றை வழங்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x