Published : 16 Mar 2016 09:16 AM
Last Updated : 16 Mar 2016 09:16 AM
படித்தவர்கள், பெண்கள், இளைஞர்களுக்கு 75 சதவீதத்துக்குமேல் வாய்ப்பு அளிக்கும் வகையில் அதிமுக வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கூட்டணி கட்சித் தலைவர்கள் சிலரை அழைத்து பேசினார். மேலு சில கட்சிகளுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில், அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் கூறியதாவது:
அதிமுகவை பொறுத்தவரை, 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதே பொதுச்செயலாளரின் முடிவாக உள்ளது. இதன் அடிப்படையில்தான், வேட்பாளர் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. முதலில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரிடம் இப்பணிகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன. தற்போது முதல்வரே வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளார். உளவுத்துறை, தனியார் நிறுவனத்தின் உளவுத்தகவல் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மூத்த நிர்வாகிகள் 10 சதவீதம் பேருக்கும், தற்போதைய எம்எல்ஏக்களில் 15 சதவீதம் பேருக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். மீதமுள்ள 75 சதவீதம் பேரில், பட்டதாரிகள், இளைஞர்கள், பெண்களுக்கு வாய்ப்பு அளிக்க தலைமை முடிவெடுத்துள்ளது. தற்போதைய அமைச்சர்களில் 5 அல்லது 6 பேருக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. வரும் 29-ம் தேதிக்குள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT