Published : 15 Nov 2021 08:53 PM
Last Updated : 15 Nov 2021 08:53 PM

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 60,74,037 உணவு பொட்டலங்கள் வழங்கல்: சென்னை மாநகராட்சி 

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு 60,74,037 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றுதல், மரக்கிளைகளை அப்புறப்படுத்துதல், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக மீட்டு நிவாரண மைங்களில் தங்கவைத்தல் போன்ற நிவாரண பணிகளும் மழைக்கால வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவ முகாம்கள், தேங்கிய திடக்கழிவுகளை அகற்ற தீவிர தூய்மைபணி போன்ற பாதுகாப்பு நடவடிககைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.

மூன்று வேளை விலையில்லா உணவு :

தமிழக முதல்வர் கடந்த 07.11.2021 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் மழை வெள்ள பாதிப்புகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப்பணி அளவிலான அலுவலர்களுடன் மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையின் போது அவர், மழைநீர் தேங்கி உள்ள இடங்களில் உடனடியாக நீரை வெளியேற்றவும், மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கவும் உத்தரவிட்டார்.

அதனடிப்படையில், மழைநீர் தேங்கிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மாநகராட்சியின் நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு மூன்று வேளையும் தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மாநகரின் பெரும்பாலான இடங்களில் மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இயல்புநிலை திரும்பியுள்ளது. எனவே, முகாம்களில் இருந்த பொதுமக்கள் தங்களுடைய வசிப்பிடத்திற்கு படிப்படியாக செல்கின்றனர். இன்றைய (15..11.2011) நிலவரப்படி நிவாரண முகாம்களில் 1530 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 07.11.2021 முதல் 15.11.2021 வரை மாநகராட்சியின் சார்பில் 60,74,037 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு :

தமிழக முதல்வர் கடந்த 09.11.2021 அன்று பொருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை ஆய்வு செய்த பின்னர் மாநகராட்சியின் அம்மா உணவகங்களில் மழை முடியும் வரை இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்டார்.

இதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் இயங்கி வரும் 403 அம்மா உணவகங்களில் 10.11.2021 முதல் 14.11.2021 வரை 13,68,385 நபர்கள் இலவசமாக உணவருந்தி பயனடைந்துள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x