Last Updated : 15 Nov, 2021 03:26 PM

 

Published : 15 Nov 2021 03:26 PM
Last Updated : 15 Nov 2021 03:26 PM

குமரிக் கடலில் சேதமடைந்த இயந்திரப் படகுக்கு ரூ.70 லட்சம் இழப்பீடு: பனாமா சரக்குக் கப்பல் நிறுவனம் தகவல் 

மதுரை 

குமரிக் கடல் பகுதியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் சேதமடைந்த இயந்திரப் படகுக்கு ரூ.70 லட்சம் இழப்பீடு வழங்குவதாக பனாமா நாட்டு சரக்குக் கப்பல் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி குளச்சல் கடல் பகுதியில் அக்.22-ம் தேதி பகல் 3 மணியளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இயந்திரப் படகு மீது பனாமா நாட்டின் எம்வி நவ்யாஸ் வீனஸ் சரக்குக் கப்பல் மோதியது. இதில் இயந்திரப் படகும், அதிலிருந்த மீனவர்களும் காயமடைந்தனர். இது தொடர்பாகக் குளச்சல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் இயந்திரப் படகு உரிமையாளர் ராஜாமணி, குளச்சல் போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கை நியாயமாக விசாரிக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும், வழக்கு முடியும் வரை மும்பை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பனாமா நாட்டு கப்பலைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பனாமா கப்பலைப் பறிமுதல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி மும்பை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பனாமா கப்பலை அக்.29-ம் தேதி போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இழப்பீடு தொடர்பாக மனுதாரர் தரப்புக்கும், கப்பல் நிறுவனத் தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், ரூ.70 லட்சம் இழப்பீடு வழங்க கப்பல் நிறுவனம் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும், அப்பணத்தை வரைவு காசோலையாக உயர் நீதிமன்றப் பதிவாளர் முன்பு வழங்க உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், பறிமுதல் செய்த கப்பலை விடுவிக்கவும், இழப்பீட்டுப் பணத்தில் ரூ.50 லட்சத்தைக் காயமடைந்த மீனவர்களுக்கு இழப்பீடாக வழங்குவதற்கு ஒதுக்கி வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x