Published : 15 Nov 2021 07:11 AM
Last Updated : 15 Nov 2021 07:11 AM

தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

கோப்புப்படம்

சென்னை

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிபா.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வட தமிழகத்தின் உள் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 15-ம் தேதி (இன்று) முதல் 18-ம் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

15-ம் தேதி (இன்று) கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கோவை, சேலம், தருமபுரி, கடலூர்,அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

16-ம் தேதி நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், 17, 18-ம்தேதிகளில் வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யும்.

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி,புத்தன் அணையில் 22 செ.மீ.,களியலில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மத்திய அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால் குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.தெற்கு அந்தமான் பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில்சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x