Published : 14 Nov 2021 05:56 PM
Last Updated : 14 Nov 2021 05:56 PM

சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கு உரிய ஆவணங்களுடன் நாளைக்குள் பதிவு செய்க: விவசாயிகளுக்கு வேளாண் துறை வலியுறுத்தல்

தமிழகத்தில், இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் இன்றும் (14.11.21), நாளையும் (15.11.21) பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்களை அணுகி இத்திட்டத்தில் பதிவு செய்து பயனடையுமாறு வேளாண்மை – உழவர் நலத்துறை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் ஆண்டு சம்பா பருவ பயிர்களுக்கான காப்பீடு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 20.95 இலட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டு சுமார் 10 இலட்சம் விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பா நெற்பயிருக்கான காப்பீடு தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாருர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 15 அன்று முடிவடைவதால், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஞாயிற்றுகிழமை ஆகிய இன்றும், நாளையும் பொது சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் முழுவீச்சில் இயங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் இன்றும் (14.11.21), நாளையும் (15.11.21) பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்களை அணுகி இத்திட்டத்தில் பதிவு செய்து பயனடையுமாறு வேளாண்மை, உழவர் நலத்துறை கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x