சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு: சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை

சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு: சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை
Updated on
1 min read

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவசங்கர் பாபா மீது ஏற்கெனவே 3 போக்சோ வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு மாணவி கொடுத்த புகாரின்பேரில் அவர் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா (79). இவர் தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜூன் 16-ம் தேதி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

3 மாணவிகள் கொடுத்த புகார்களின்பேரில் இவர் மீது தனித்தனியாக 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் சிவசங்கர் பாபா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக நடன ஆசிரியை சுஷ்மிதாவையும் சிபிசிஐடி போலீஸார் ஜூன் 18-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சுஷில் ஹரி பள்ளியில் படித்த மாணவி ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசிக்கிறார். அவர் ஆன்லைன் மூலம் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

இதேபோல மற்றொரு முன்னாள் மாணவிக்கும் சிவசங்கர் பாபா பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, பெங்களூருவில் வசிக்கும் தாய் புகார் கொடுத்துள்ளார். இந்த 2 புகார்களின்பேரில் சிவசங்கர் பாபா மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சிபிசிஐடி போலீஸார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

6 வழக்குகள்

இந்நிலையில், தற்போது வேறொரு மாணவி கொடுத்த புகாரின்பேரில் சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கை சிபிசிஐடி போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

சிவசங்கர் பாபா மீது இதுவரை மொத்தம் 4 போக்சோ வழக்குகள், 2 பெண் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in