

கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பயின்றுவந்த 17 வயது மாணவி கடந்த வியாழன் அன்று கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுத் தனது வீட்டு மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அந்தக் கடிதத்தில், சில மாணவிகள், ஒரு ஆசிரியரைக் குறிப்பிட்டு அவர்களை சும்மா விடக்கூடாது என எழுதப்பட்டு இருந்தது. தற்கொலை செய்த மாணவிக்கு, அவரது பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்ததாகவும், அதனால் மனமுடைந்தே மாணவி தற்கொலை செய்துகொண்டார் எனவும் கூறப்படுகின்றது.
மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் மீது போக்சோ, தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆசிரியரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் மாணவியின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, மாணவி தற்கொலை செய்த விவகாரம் மாணவர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் வீடு முன்பு திரண்ட பல்வேறு அமைப்பினர், உடன் பயின்ற சக மாணவர்கள் உள்ளிட்ட பலர் இணைந்து, நீதி கிடைக்கும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம், தனியார் பள்ளி முதல்வரைக் கைது செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பி சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ''கோவை பள்ளி மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.