Published : 13 Nov 2021 02:04 PM
Last Updated : 13 Nov 2021 02:04 PM

கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு; நிவாரண உதவிகளை வழங்கினார்

சென்னை

கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (13.11.2021) தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தினாலும் கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையை ஒட்டியும், வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகவும் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளைத் தமிழக முதல்வர் கடந்த 7ஆம் தேதி முதல் தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கி, சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரைத் துரிதமாக அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக ஏழாவது நாளாக இன்று (13.11.2021) கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், அரங்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மாருதி நகர் பகுதியில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளைத் தமிழக முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், 18 ஆதிதிராவிட குடும்பங்களுக்கு 5 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடு கட்டுவதற்கு தலா ரூ.2,10,000-க்கான ஆணை மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, ஆடூர்அகரம் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம் வெள்ள பாதிப்புகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளாக, கனமழையால் பசுமாடு இழந்தவர்களுக்கு தலா ரூ.30,000 கன்றுக்குட்டி இழந்தவர்களுக்கு தலா ரூ.16,000, பகுதியளவு கூரைவீடு சேதமடைந்தவர்களுக்கு தலா ரூ.4,100 என மொத்தம் 10 பயனாளிகளுக்கு ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணத் தொகைகளை வழங்கினார்.

பின்னர், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், புத்தூர் கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம் வெள்ள பாதிப்புகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.

மேலும், கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களையும், வெள்ள பாதிப்புகளை விளக்கும் புகைப்படங்களையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து, தரங்கம்பாடி வட்டம், கேசவன்பாளையம் மீனவர்கள் வாழும் சுனாமி குடியிருப்புப் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளை முதல்வர் பார்வையிட்டு, வெள்ள பாதிப்புகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்து, நிவாரண உதவிகளை வழங்கினார்.

மேலும், அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமையினைப் பார்வையிட்டு, மருத்துவர்களிடம் மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்துக் கேட்டறிந்தார்''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x