Published : 28 Mar 2016 09:55 AM
Last Updated : 28 Mar 2016 09:55 AM

விஜயகாந்த் அணி என்பதால் கவுரவ குறைச்சல் இல்லை: திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம், சென்னை வடபழனியில் நேற்று நடந்தது. பின்னர், நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:

மக்கள் நலக் கூட்டணியின் 5-ம் கட்ட பிரச்சாரம் நாகர்கோவிலில் நாளை (இன்று) தொடங்குகிறது. இதில் எங்களுடன் இணைந்துள்ள தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் கலந்துகொள்வார்.

கோவில்பட்டியில் நடக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் தேமுதிக இளைஞரணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்கவுள்ளார். வரும் 31-ம் தேதிக்குள் எங்களின் தொகுதிப் பங்கீட்டு பட்டியலை தயார் செய்வோம். பின்னர் தேமுதிக தேர்தல் பணிக்குழுவுடன் விவாதித்து, தொகுதிகளை இறுதி செய்வோம்.

வேட்பாளர் அறிமுகக் கூட்டம், ஏப்ரல் 10-ம் தேதி நடக்கவுள்ளது. அதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்பார். எங்கள் கூட்டணியின் பெயர் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணிதான். பாமர மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக இதை விஜயகாந்த் அணி என்று சொல்வதால் எங்களுக்கு எந்த கவுரவ குறைச்சலும் இல்லை.

மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். ம.ந.கூட்டணிக்கு அதிமுக ரூ.1,500 கோடியை கொடுத்தது என்று சிலர் கூறுகின்றனர். எங்கள் கூட்டணியை களங்கப்படுத்த வேண்டும் என்று அப்படி சொல்கின்றனர்.

தமாகாவுக்கு நாங்கள் விடுத்த அழைப்பு அப்படியே உள்ளது. அவர் எங்கள் கூட்டணிக்கு வருவார் என்று நம்புகிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x