

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழையால் பாதிகப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்க முன்வரவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான உணவு மூன்று வேளையும் அனைத்து மண்டலங்களிலும் தயாரித்து தரமான மற்றும் சுவையான உணவுகளை அந்தந்த இடத்திற்கே நேரில் சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய், பாய், தலையணை, போர்வை, சோப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்க முன்வந்தால், மண்டலம்-8, சென்னை-102, ஷெனாய் நகர், கீழ்ப்பாக்கம் கார்டன் காலணி, நியூ ஆவடி சாலை அருகில் உள்ள ஜெ.ஜெ. உள் விளையாட்டு அரங்கத்திற்கு நேரில் கொண்டு வந்து வழங்கலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அழுகும் பொருட்கள், சமைக்கப்பட்ட உணவு வகைகள் மற்றும் பழைய பொருட்கள் போன்றவைகளை வழங்குவதை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரண பணிகளுக்கு உடன் இணைந்து பணி செய்ய விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியில் https://forms.gle/NkEVTjvsH8hKTvoo9 என்ற மின்இணைப்பில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், விவரங்களுக்கு, 94450-25821 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.