Published : 12 Nov 2021 08:57 AM
Last Updated : 12 Nov 2021 08:57 AM

தருமபுரி அருகே மலைப்பாதையில் பாறைகள் சரிந்ததால் தடம் புரண்ட பயணிகள் ரயில்

தருமபுரி 

தருமபுரி மாவட்டம் முத்தம்பட்டி மலைப்பாதையில் பாறைகள் சரிந்ததால் கண்ணணூர் விரைவு ரயில் தடம் புரண்டது.

கேரள மாநிலம் கண்ணணூரிலிருந்து பெங்களூரு அடுத்த யஷ்வந்த்பூர்‌ நோக்கி பயணிகள் விரைவு ரயில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது.

இன்று (12.11.21) அதிகாலை சேலம் ரயில் நிலையத்தை கடந்து பயணித்த ரயில் 3.50 மணியளவில் தருமபுரி மாவட்டம் வே.முத்தம்பட்டி பகுதி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, தொடர் மழை காரணமாக ரயில் பாதையை ஒட்டிய மலைப்பகுதியில் இருந்து மண் சரிவு ஏற்பட்டது.

இதில் பாறைகளும் பெயர்ந்து ரயில் என்ஜினின் சக்கரத்தில் சிக்கியதால் ரயில் என்ஜின் லேசாக தடம் புரண்டது. மேலும் என்ஜினை ஒட்டியுள்ள 5 பெட்டிகளும் தடம் புரண்டன. அதே நேரம் ரயில் பயணிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

தகவல் அறிந்த ரயில்வே துறை பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தொடர் மழையிலும் ரயில் மீட்பு மற்றும் பாதை சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது, ஒற்றை வழித்தட ரயில்பாதை என்பதால் அதிகாலை முதல் இவ்வழியே செல்லும் அனைத்து ரயில்களின் இயக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடம் வனப்பகுதியின் நடுவே உள்ளதால் விபத்தில் சிக்கிய ரயிலின் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x