டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் குழு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் குழு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
Updated on
1 min read

மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை பார்வையிட்டு அறிக்கை அளிப்பதற்காக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில்குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்து, தற்போது பயிர்களை காப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும், பயிர் சேத விவரங்களை அறியவும், அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்.

இந்தக் குழுவில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழுவினர் உடனடியாக டெல்டா மாவட்டங்களுக்குச் சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஏதுவாக முதல்வருக்கு அறிக்கை தர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in