Last Updated : 12 Nov, 2021 03:16 AM

 

Published : 12 Nov 2021 03:16 AM
Last Updated : 12 Nov 2021 03:16 AM

திருப்புவனத்தில் துண்டிக்கப்பட்ட 10 கிராமங்கள்: 2 கி.மீ. தூரத்துக்கு பதிலாக 12 கி.மீ. சுற்றிச்செல்லும் பள்ளி மாணவர்கள்

திருப்புவனம் அருகே லாடனேந்தலில் வைகை ஆற்றின் குறுக்கே கிராம மக்கள் கடந்து செல்லும் இடத்தில் செல்லும் தண்ணீர்.

திருப்புவனம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் 10 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் 2 கி.மீ. தொலைவில் உள்ள திருப்புவனத்துக்கு 12 கி.மீ. தூரம் சுற்றி பள்ளி மாணவர்கள் சென்று வருகின்றனர்.

வைகை ஆற்றின் தென்பகுதியில் மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலை செல்கிறது. ஆற்றின் வடபகுதியில் திருப்புவனம் ஒன்றியத்தைச் சேர்ந்த கே.பெத்தானேந்தல், மணல்மேடு, கணக்கன்குடி, கருங்குளம், வெங்கட்டி, சடங்கி, பாப்பாகுடி உள்ளிட்ட 10 கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அனைத்துத் தேவைகளுக்கும் மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலை வழியாக திருப்புவனம் மற்றும் மதுரை செல்கின்றனர்.

இந்த சாலைக்குச் செல்ல ஆற்றுக்குள் தற்காலிகப் பாதை அமைத்துள்ளனர். மழைக் காலங்களில் தண்ணீர் வரும்போது வைகை ஆற்றைக் கடக்க முடியாததால், ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டித் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்தாண்டு நெடுஞ்சாலைத்துறை (நபார்டு கிராமச் சாலைகள்) பாலம் அமைக்க மண் பரிசோதனை நடந்தது. ஆனால் அதன்பிறகு பணிகள் நடக்கவில்லை.

தற்போது வைகை ஆற்றில் தண்ணீர் செல்வதால் ஆற்றைக் கடக்க முடியாமல் 10 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் பள்ளி மாணவர்கள் 2 கி.மீ. தொலைவில் உள்ள திருப்புவனத்துக்கு 12 கி.மீ. சுற்றி மடப்புரம் வழியாக செல்கின்றனர்.

இதுகுறித்து மணல்மேடு வழக்கறிஞர் ராஜா கூறியதாவது: உயர்மட்ட பாலத்துக்காக 30 ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால் பாலம் கட்டாததால் ஆற்றில் வெள்ளம் போகும் சமயங்களில் சிரமப்படுகிறோம். இதனால் 12 கி.மீ. சுற்றிச் செல்கிறோம். ஆனால் அவ்வழியாக செல்ல பேருந்து வசதியும் இல்லாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே விரைவில் பாலப்பணியை தொடங்க வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x