மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முழுமையாக ஒழிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகள் போன்றமனிதக் கழிவுகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் எனக்கோரி சபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப் பட்டிருந்தன.
இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் நடந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, தமிழகத்தில் எந்தமாநகராட்சியிலும் பாதாளச் சாக்கடை உள்ளிட்ட மனிதக்கழிவுகளை அகற்ற மனிதர்கள் ஈடுபடுத்தப்படவில்லை, என்றார்.
மேலும் இதுதொடர்பாக மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்ட ஆலோசனைகள் குறித்த அறிக்கையை தாக்கல்செய்தார்.
அதையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்படுவோருக்கு மாற்று வேலை உள்ளது என்ற விழிப்புணர்வை அரசு தான் ஏற்படுத்த வேண்டும். பாதாள சாக்கடைக் கழிவுகளை அகற்றும் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் ரூ.10 லட்சம் இழப்பீடு என்பது போதுமானது அல்ல. அந்த தொகையை அதிகரித்து வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும், என்றனர்.
மேலும், மனிதக்கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு அபராதம் விதிப்பது போன்ற உடனடிநடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இதுபோன்று கழிவுகளை மனிதர்களே அகற்றும் நடைமுறையை முழுமையாக ஒழிக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
