இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் கொலை: நீடாமங்கலத்தில் பதற்றம்; போலீஸ் குவிப்பு

நடேச.தமிழார்வன்
நடேச.தமிழார்வன்
Updated on
1 min read

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் நேற்று மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவர் நடேச.தமிழார்வன்(50). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளராக இருந்து வந்தார்.

இவர், நேற்று மாலை நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்தகும்பல் ஒன்று, நடேச.தமிழார்வனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு, தப்பிச் சென்றது. இதில், அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து அங்கு வந்த நடேச.தமிழார்வனின் ஆதரவாளர்கள், கொலை சம்பவத்தைக் கண்டித்து, நீடாமங்கலம் கடைவீதியில் உள்ள கடைகள், அவ்வழியாகச் சென்ற வாகனங்கள் மீது கல்வீசி தாக்கினர். மேலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தினர்.

ஆனாலும், தமிழார்வனின் உடலை போலீஸாரிடம் ஒப்படைக்க மறுத்து, அவரது உடலின் முன்பு அமர்ந்து, கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால், அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகள் யார் என்பது குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

குண்டர் சட்டத்தில் கைது

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளராக இருந்து வந்த நடேச.தமிழார்வன், நீடாமங்கலம் பகுதியில் பல்வேறு பிரச்சினைகளுக்காக போராடியவர்.

இவர் மீது அரசியல் வழக்குகள் தவிர பல்வேறு அடிதடி வழக்குகளும் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்பு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, போலீஸாரிடம் இருந்து தப்பியோடியதால், அதுதொடர்பான வழக்கையும் எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in