Published : 11 Nov 2021 03:07 AM
Last Updated : 11 Nov 2021 03:07 AM

நவ.15 முதல் உயர் நீதிமன்றத்துக்குள் செல்ல வழக்கறிஞர்களுக்கு அனுமதி: தலைமைப் பதிவாளர் அறிவிப்பு

கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் வரும் நவ.15-ம் தேதி முதல் வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்துக்குள் செல்ல அனுமதியளித்து உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2019 ஏப்ரல் முதல் நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், நீதித்துறை ஊழியர்கள், சிஐஎஸ்எப் போலீஸார் தவிர்த்து வேறு யாரும் உயர் நீதிமன்றத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. வழக்கு விசாரணைகள் காணொலி மூலமாக நடைபெறுவதால் வழக்கறிஞர்கள், குமாஸ்தாக்கள் உயர் நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் வழக்குகளை தாக்கல் செய்து வந்தனர்.

மேலும் வழக்கறிஞர்கள் தங்களின் சேம்பர்களுக்கு மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டனர். கரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில் உயர் நீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணையை வழக்கம்போல் தொடங்க வேண்டும் என்றும், வழக்கறிஞர்களை உயர் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியின் அறிவுறுத்தல்படி தலைமைப் பதிவாளர் பி.தனபால் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘உயர் நீதிமன்றத்துக்குள் செல்ல வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்களின் குமாஸ்தாக்கள் வரும் நவ.15-ம் தேதி முதல் அனைத்து வாயில்களிலும் அனுமதிக்கப்படுவர்.

வழக்காடிகளுக்கு அனுமதியில்லை. அதேநேரம் வழக்கில் தானே ஆஜராகும் மனுதாரர்கள் மட்டும் உரிய முன்அனுமதி பெற்று ஆஜராகலாம். வழக்கு விசாரணைகள் நேரடி மற்றும் காணொலி என இருமுறைகளிலும் நடைபெறும்.

வழக்கறிஞர்கள் சங்கங்கள் தங்களது நூலகங்களை திறக்கலாம். கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி வழக்கறிஞர்கள் நூலகங்களுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x