பாலாற்று பாலத்தின் அடியில் 3 நாட்களாக சிக்கியிருந்தவர் மீட்பு

பாலாற்று பாலத்தின் அடியில் சிக்கித் தவித்த நபரை தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் மீட்டனர்.
பாலாற்று பாலத்தின் அடியில் சிக்கித் தவித்த நபரை தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் மீட்டனர்.
Updated on
1 min read

பாலாற்று பாலத்தின் அடியில் 3 நாட்களாக சிக்கியிருந்த மதுராந்தகம் பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், செங்கல்பட்டு அருகே பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாலாற்றில் சுமார் 13 ஆயிரத்து 500 கன அடி நீர் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாலாற்று பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்ட நபரை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் மற்றும் தீயணைப்பாளர்கள் யுவராஜ், சக்திவேல், பாலாஜி உள்ளிட்ட 8 தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரமாகப் போராடி பாலாற்றின்கீழ் சிக்கியிருந்த நபரை மீட்டனர்.

முதல்கட்ட விசாரணையில் அவர் மதுராந்தகம் அடுத்த கரிக்கலி பகுதியை சேர்ந்த உதயகுமார்(48) என்பதும் கடந்த 3 நாட்களாக அங்கேயே இருப்பதும் மது போதையில் ஆற்றில் படுத்து உறங்கியதும் தெரியவந்தது. பாலாற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கிருந்து செல்ல முடியாமல் சிக்கியதும் தெரியவந்தது.

பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in