Published : 10 Nov 2021 04:23 PM
Last Updated : 10 Nov 2021 04:23 PM

அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தாண்டு வரும் 19ஆம் தேதி மகா தீபத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் கடந்த 7ஆம் தேதி இரவு துர்கையம்மன் உற்சவமும், 8ஆம் தேதி பிடாரி அம்மன் உற்சவமும், நேற்று (நவ.9) வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெற்றது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று (நவ.10) காலை நடைபெற்றது. கோயில் வளாகத்தில் உள்ள தங்கக் கொடிமரத்தில் இன்று காலை 6.30 மணியில் இருந்து 7.25 மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, அரோகரா முழக்கத்துடன் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில், பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் முக்கியப் பிரமுகர்கள், கோயில் ஊழியர்கள் மற்றும் உபயதாரர்கள் உள்ளிட்டோர் மட்டும் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவில் கோயிலின் 5ஆம் பிரகாரத்தில் உண்ணாமுலை சமேத அண்ணாலையார் மற்றும் பஞ்சமூர்த்திகள் உற்சவ உலா நடைபெற உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 19ஆம் தேதி அதிகாலை கோயிலில் பரணி தீபமும், மாலையில் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. கரோனா தொற்றுப் பரவல் அச்சத்தால் கோயில் பிரகாரத்தில் தினமும் நடைபெறும் உற்சவர் உலா மற்றும் மகா தீபத்தைக் காண பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x