கொசஸ்தலையாற்றில் சீறிப்பாயும் பூண்டி ஏரியின் உபரி நீர்: வெள்ளத்தில் சிக்கிய 36 பேர் மீட்பு
வடகிழக்குப் பருவமழை தொடங்கி விடாமல் கனமழை பெய்து வருகிது. பூண்டி ஏரியின் உபரி நீர் 5000 அடியாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் சீறிப்பாயும் கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 36 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சென்னைக்கு குடிநீர் ஆதாரமான ஏரிகளில் பூண்டி ஏரி முக்கியமானதாக உள்ளது. ஆந்திர மாநிலத்திலிருந்து அம்மப்பள்ளி அணை, கிருஷ்ண கால்வாய், பல்வேறு நீர்ப்பிடிப்புப் பகுதிகள் அனைத்திலும் நீர் பெருகி வரும் காரணங்களால் பூண்டி முழுக் கொள்ளளவை தாண்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கத்தின் கொள்ளளவு 3321 மில்லியன் கனஅளவு. கனமழையின் காரணமாக குறிப்பிட்ட அளவைத் தாண்டி பூண்டி ஏரிக்கு நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக தொடர்ந்து பூண்டி ஏரியியிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
பூண்டிஏரியிலிருந்து 5000 அடி நேற்று உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் கொசஸ்தலை வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. கோட்டைக்குப்பம் பகுதியில் கொசஸ்தலையாறு இரண்டாகப் பிரிகிறது.
வெள்ளத்தின் அபாயத்தை உணராமல் அப்பகுதியைச் சேர்ந்தவர் பலர் ஆற்றைக் கடக்க முயன்றனர். திடீரென சீறிப்பாய்ந்து வெள்ளத்தில் ஆற்றைக் கடக்க முயன்ற 36 பேர் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தனர். தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
