

புதுச்சேரி சித்தேரி அணைக்கட்டில் இரண்டு ஷட்டர்கள் பழுதால் வெளியேற்ற முடியாத உபரிநீர் பாகூரை சுற்றியுள்ள 25 கிராமங்களில் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் அலட்சியம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
புதுச்சேரியில் கடந்த இரு நாட்களாக மழை பொழிவு அதிகளவில் உள்ளது. மொத்தமுள்ள 84 ஏரிகளில் பெரும்பான்மையானவை நிரம்பி விட்டன. பெரிய ஏரிகளான ஊசுட்டேரி, பாகூர் ஏரி முழு கொள்ளளவை எட்டும் சூழலில் உள்ளன.
பாகூர் அடுத்த குருவிநத்தத்தில் உள்ள சித்தேரி அணைக்கட்டு முழு கொள்ளவை எட்டியதால் உபரிநீர் திறக்கப்பட்டது. அப்போது அதிலிருந்த நான்கு மதகுகளில் இரண்டு மதகுகள் வேலை செய்யவில்லை. அவற்றை திறக்க முடியாததால் இரு மதகுகள் மட்டுமே திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
விவசாயிகள் தரப்பில் கூறுகையில், ''மொத்தம் நான்கு மதகுகளையும் திறந்தால்தான் உபரிநீரை அதிகளவில் வெளியேற்ற முடியும். தமிழகப் பகுதியில் இருந்து வரும் உபரிநீரும் அதிகளவில் வருகிறது. ஷட்டர்களைத் திறக்க முடியாததால் பாகூர், பரிக்கல்பட்டு, குருவிநத்தம், ஆராய்ச்சிக்குப்பம், 25 கிராமத்துக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே திறந்த உபநீர் பல விவசாய நிலங்களில் புகுந்துள்ளது. விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன" என்றனர்.
பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், "ஷட்டர் பழுதானது பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு முன்பே தெரியும். மழைகாலத்துக்கு முன்பே பழுது பார்க்கவில்லை. உபரிநீர் இதனால் வெளியேற்ற முடியவில்லை. ஊருக்குள் வெள்ளநீர் புகும் சூழல் உருவாகியுள்ளது. விவசாயம் முற்றிலும் பாதிப்பு அடைய அரசின் மெத்தனப்போக்கு காரணமாக உள்ளது. போர்காலம் அடிப்படையில் சரி செய்ய உத்தரவிட வேண்டும். சித்தேரி அணை சுற்றி ஆகாயத்தாமரை, தேவையற்ற செடிகளைக் களை எடுக்கவில்லை. விவசாய நிலங்களை வெள்ளநீர் சூழ அதிகாரிகள் செயல்பாடு இன்மைதான் காரணம்" என்று குறிப்பிட்டனர்.