

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 2, குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் முறைகேடு செய்ததாக இதுவரை 191 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் மோசடி நடந்துள்ளதாகவும் இம்மோசடி குறித்து விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி சரியான முறையில் விசாரிக்கவில்லை எனவும் புகார் எழுந்தது. உரிய நடவடிக்கை கோரி மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமதுரஷ்வி, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதுகுறித்து வழக்கறிஞர் முகமதுரஷ்வி தனது மனுவில் கூறுகையில், தமிழகத்தில் 2019-ல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் சுமார் 16 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வில் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் முதல் நூறு இடங்களில் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வில் மிகப்பெரிய அளவில் மோசடி நடைபெற்றுள்ளது. இந்த மோசடி குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கின்றனர். சிபிசிஐடி போலீஸார் சரியாக விசாரிக்கவில்லை. எனவே, குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.நீலமேகம் வாதிட்டார்.
சிபிசிஐடி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், டிஎன்பிஎஸ்சி 2016-ல் நடத்திய கிராம நிர்வாக அலுவலர் தேர்வு, 2017-ல் நடத்திய குரூப் 2, 2019-ல் நடத்திய குரூப் 4 தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். குரூப் 4 தேர்வில் 99 தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களில் 39 பேர் முறைகேடாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 95 தேர்வர்கள், டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள் 2 பேர் உட்பட 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது. விடைத்தாட்களை சென்னைக்கு கொண்டுச் செல்லும் வழியில் முறைகேடு நடைபெற்றுள்ளது.
குரூப் 2 தேர்வு முறைகேடு வழ்கில் 40 தேர்வர்கள், 3 போலீஸார், 2 கிராம நிர்வாக அலுவலர்கள், டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஒருவர் உட்பட 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2016-ல் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் 9 பேர் முறைகேடாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வழக்கில் 8 தேர்வர், ஒரு போலீஸ் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி எஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டியதில்லை.
இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து விசாரணையை நாளைக்கு (நவ. 10) நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.